புதன், 27 மார்ச், 2013

பெயரிலே என்ன இருக்கிறது? 3

ரேகா - அனைவரும் அறிந்த பெயர்.  நமது ஜெமினி கணேசனின் மகள் மற்றும் ஹிந்தி நடிகையாக பல காலம் குப்பை கொட்டியவர். 

அவரின் பெயருக்கான அர்த்தம் அவருக்கே தெரியுமோ தெரியாதோ!

இராமாயணம் அறிந்த அனைவருக்கும் இந்த பெயரையும் தெரியும்.  இலட்சுமணன் சீதா தேவிக்கு போட்ட கோடு லட்சுமண ரேகை.  அதாவது வடமொழியில் லட்சுமண ரேகா. 

ரேகை - அல்லது கோடு.  இப்படி ஒரு பெயரா?

கிரணம்.  கிரகணமில்லை.  அதாவது ஒளி.  சூரிய ஒளி - சூரிய கிரணம் - சூரிய ரேகை. 

கிரண் என்று வடநாட்டில் பெண்களுக்கு பெயர் வைப்பர்.  நடிகை கிரண்.  கிரண் பேடி.  கிரணம் - ஒளி.

சசிரேகா என்ற பெயருண்டு.  சசி - சந்திரன்.  சசிரேகா.  சந்திரனின் ஒளி.
நிலவொளி எனலாம்.

சசிகலா.   சந்திர ஒளி.  கலா என்பதற்கு கலை என்ற பொருளுண்டு.  இங்கு நிலவொளி எனலாம்.

கலாவதி.  கலையிற் சிறந்தவள்.  சரஸ்வதி.

வெள்ளி, 22 மார்ச், 2013

பெயரிலே என்ன இருக்கிறது? 2

ஆதி ஸ்ரீ என்ற பெயர் ஒரு ஆண் பிள்ளையின் பெயராம்!

மிக்க மகிழ்ச்சி.

இனி சில பெயர்களைக் குறித்து பார்ப்போம்.

முதலில் வரும் பெயர் பிரேம லதா.

பிரேமம் என்றால் காதல், அன்பு, பாசம்.

லதா என்பது கொடி.

காதற்கொடி,

அன்புக் கொடி என்பதுதான் அதன் அர்த்தம்.

அடுத்ததாக இன்னுமொரு கொடி.  அதாவது ஸ்வர்ண லதா.  ஸ்வர்ணம் என்பது உலகமறிய தங்கத்தைக் குறிக்கும்.  தங்கக்கொடி என்றும் பொற்கொடி என்றும் சொல்லலாம்.

என் மச்சினனின் முதல் குழந்தையின் பெயர் சுப ஸ்ரீ.  அது பெண் குழந்தைதான்.

சுபம் என்றால் முடிவு.  முதல் குழந்தைக்கு முடிவு என்று யாராவது பெயர் வைப்பார்களா?

இரண்டாவது ஆண் குழந்தை அதன் பெயர் ஆதி ஸ்ரீ.  பெண் குழந்தையின் பின்னால் ஸ்ரீ சேர்க்கிறீர்கள் ... சரி.  ஆண் குழந்தைக்கும் ஸ்ரீ தானா?
ஸ்ரீ என்பது இலக்குமியை அல்லவா குறிக்கும்.  இலக்குமிக்கும் ஆணின் பெயருக்கும் என்ன தொடர்பு?

ஸ்ரீ என்ற பெயருக்கு பொருத்தமான ஒரே ஆண் ராமன்தான்.  ஸ்ரீ ராம்.  இராமன் என்பவர் திருமாலின் கூறு.  திருமாலின் மனைவி இலக்குமி.  எனவே ஸ்ரீ-க்கு உரிமையான ஆண் அவர் மட்டுமே.

சரி மச்சினனின் பிரச்சினைக்கு வருவோம்.  மச்சினனின் பையன் ஆதி ஸ்ரீ.  ஆதி என்பது துவக்கம்.  இரண்டு குழந்தைக்கு மேல் அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்கையில் கடைசிக் குழந்தை என்பது எப்படி துவக்கமாகும்?

என்ன உலகமடா இது!

வியாழன், 21 மார்ச், 2013

பெயரிலே என்ன இருக்கிறது?



நீண்ட நாள் கழித்து இன்று எழுத நேரம் வந்தது!

இனி நல்ல காலந்தான்.


சேர சோழ மற்றும் பாண்டியர் காலத்தில் கடுந்தமிழில் கொடுந்தமிழில் பெயரிடப்பட்ட காலங்கள் மாறி இடைக்காலத்தில் கோவிந்தசாமி மாடசாமி மன்னார்சாமி ரெங்கசாமி என சாமிகளின் பெயர்களிடப்பட்டதுபோய் இன்று சமஸ்கிருதம் எனும் வடமொழியில் பெயரிடும் பித்து கன்னாபின்னா என்று தலைக்கு ஏறியுள்ளது.


அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ அவரவர் காதில் விழுந்த பெயரினை இட்டுக்கொள்கின்றனர்.  அதிலும் ஜ ஸ ஹ ஸ்ரீ ஹ என்று கண்டிப்பாக வந்தால்தான் வாழ்க்கை சிறக்குமாம்.
     
அதிலும் ஆணோ பெண்ணோ பெயர் ஸ்ரீ-யில் தொடங்கவேண்டும் அல்லது முடியவேண்டும்.  எனது மச்சினனின் குழந்தையின் பெயர் ஆதி ஸ்ரீ.  இது ஆணா பெண்ணா?